பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - 28-04-2024
இன்றைய வாசகங்கள் :
திருத்தூதர் பணிகள் 9: 26-31
1யோவான் 3: 18-24
யோவான் 15: 1-8
திருப்பலி முன்னுரை :
உலகின் ஒளியாய் உயிர்த்த இயேசுவில் என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே ! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க ஆலயத்தில் திரண்டிருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். மக்கள் கண்டு அஞ்சிய சவுல் இறை இயேசுவால் மனம் மாறிப் பவுலாகி இயேசுவோடு ஒன்றிக்கிறார். தன் அறிவையும் ஆற்றலையும் இயேசுவைப் பற்றிப் பேசுவதற்கே அர்ப்பணிக்கின்றார். இயேசுவோடு இணைந்த சவுல், கனிதரும் பவுலாக மாறுகிறார். இயேசுவின் அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது அவரோடு நாம் இணைந்திருக்கிறோம். இறைவனும் நம்மோடு இணைந்திருக்கிறார்.
நாம் கனிதரும் உயிருள்ள கிளைகளாக வாழ இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரோடும் அயலாரோடும் ஒன்றித்து வாழ வேண்டும். “மெளனத்தின் கனி செபம், செபத்தின் கனி அன்பு; அன்பின் கனி சேவை, சேவையின் கனி மகிழ்ச்சி' என்று அன்னை தெரசா கூறுகிறார். பகிர்தலே பேரின்பம்! மரத்தின் கனி முழுவதும் மரத்திற்கில்லை; யாழின் இசை முழுவதும் யாழிற்கில்லை என்பதையும் இயற்கை நமக்குக் கற்றுத் தருகிறது. இயேசுவோடு இணைந்து, கனிதருபவர்களாக வாழ இத்திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை :
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 22:26-27, 28,30, 31-32
பல்லவி: ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!!
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! -பல்லவி
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். -பல்லவி
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர். இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :
நம் உண்மையான அன்பைச் செயலில் காட்ட வேண்டும் என்றும் இறைவனின் அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் இறைவனோடு இணைந்திருக்கிறார். இறைவனும் அவரோடு இணைந்திருக்கிறார் என்னும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வசனம்
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அன்பின் இறைவா! உம் அன்பு குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்த புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் உடனியிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப்பயணத்தையும் காண தேவையான ஞானத்தையும், ஆற்றலையும் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.