Thursday, August 20, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-08-2015


ஆண்டின்  21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.  யோசுவா 24:1-2,15-17,18.  
2.  எபேசியர் 5:21-32.    
3.யோவான் 6:60-69

முன்னுரை:

இறைமகன் இயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். இயேசுவின் உண்மையான வார்த்தைகளின் மீது நம்பிக்கைக் கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. தங்களை வழிநடத்தும் ஒரே கடவுளுக்கு மட்டும் ஊழியம் செய்ய யோசுவாவும் மக்களும் உறுதிமொழி கூறுகிறார்கள்.. கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து வாழ பவுலடிகளார் நம்மை அழைக்கிறார்.
ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவிடம்; மட்டுமே வாழ்வுதரும் வார்த்தைகள் உள்ளன. அவர் இன்றி எவராலும் நிறைவாழ்வு தரமுடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை பேதுருவிடம் இருந்தது போல நம்மிடையே இருத்தல் அவசியம். விட்டு விலகிப்போன சீடர்களைப் போல் அன்றி, நாம் அழியாத நிறைவாழ்வுக்கு இயேசு தரும் ஆவியை நாட்டிச் செல்வோம்.. வாழ்வு தரும் அவரது வார்த்தைகளுக்கு தடையாக இருப்பவைகளை களைந்து விட்டு புதியதேர் படைப்பாய் இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. வாருங்கள் இறைமக்களே!



வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இன தெய்வங்களையும் வழிபட்டு இருமனத்தோராய் வாழ்ந்தனர். ஆனால் யோசுவா அவர்களிடம் தாம் உண்மையான இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யப்போவதாகக் கூறி அவர்களை நல்வழி நடத்தியதை யோசுவா நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து திருச்சபையை எவ்வாறு அன்பு செய்தார் என்பதை எடுத்துரைத்த பவுலடிகளார் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து ஓரே உடலாய் ஒன்றித்து வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக கிறிஸ்துவுடனும் திருச்சபையுடனும் நமது  கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிட்டு கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.




பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;
நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி



மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:
இனிய வார்த்தைகளயால் எம்மை வாழ்வை வளமாக்கும் அன்பு இறைவா! உம் திருச்சபையும் அதனை நடத்திச் செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் உம் வார்த்தைகளால் ஒன்றிணைந்து வாழவும், உமக்கு மட்டுமே ஊழியம் செய்து எம்மை நேசிக்கும் கடவுளாய் அறிக்கையிடவும் இறைவா உறுதியான மனதினைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நாட்டு தலைவர்களுக்காக:
முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..
நம் குடும்பங்களுக்கா:
வார்த்தைகளால் நிறைவாழ்வு தரும் வள்ளயே! நற்கருணை நாதரே! நாங்கள் எங்கள் குடும்பங்களில் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, எமது குடும்பவாழ்வில் உண்மையான உறவு மலரவும், இறைப் பிரசன்னத்தின் அவசியத்தை நிலைநாட்டவும் போதுமான வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..
துயருறும்  முதியோர்கள் நலன்களுக்காக:
எம் பெயரை உள்ளங்கையில் பொறித்துள்ள இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment