Thursday, September 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 13/09/2015

ஆண்டின் 24ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1.    எசாயா 50:5-9
2.    யாக்கோபு 2:14-18
3.    மாற்கு 8:27-35


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். துன்பம் வழி மெசியாநிலை! இன்றைய நற்செய்தி மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருந்தாலும், மூன்றும் சொல்வது ஒன்றுதான். மெசியாவின் பாடுகள் பட்டு மானுடம் மீட்பு பெறும் என்றும் அவரின் பாடுகள் எத்துணை கடினமானது என்றும், ஆண்டவரின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையைப் பற்றியும் இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கின்றார். செயலில் வெளிப்படாத நம்பிக்கை செத்ததே என யாக்கோபு தெளிவாகச் சொல்கின்றார்.

]
'சேர்ந்தே இருப்பது?' என்ற திருவிளையாடல் கேள்விக்கு, இயேசுவின் பதில், 'சிலுவையும், மெசியாவும்' என்றுதான் இருக்கும். இயேசு தன் மெசியா நிலை மட்டுமல்ல, தன்னைப் பின்பற்றும் எவரும் துன்பத்தின் வழியாக சீடத்துவத்தை அடைய முடியும் என மக்கள்கூட்டத்திற்கு அறிவுறுத்துகின்றார். ஆக, இழப்பவர் மட்டும்தான் பெற முடியும். இதுதான் இயேசுவின் சீடத்துவ லாஜிக். இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை? இவைகளை உணர்ந்து செயல்படும் நம்பிக்கையை, வாழ்வில் வாழ்ந்துக் காட்டிட வேண்டிய வரங்களைப் பெற இத்திருப்பலி கொண்டாடத்தில் திறந்த மனதுடன் பங்கேற்போம்..



வாசகமுன்னுரை:


முதல் வாசகத்தில் இந்த மெசியாவின் துன்பத்தைத் தான் துன்புறம் ஊழியன் என்ற உருவகம் வழியாக எசாயா முன்னுரைக்கின்றார். இந்த துன்புறும் ஊழியன் இயேசுவின் முன்னோட்டம் என்று நாம் சொல்கின்றோம். மெசியாவும் துன்பமும் சேர்ந்தே இருக்கும் என்றும், ஆண்டவர் மேல் அவரின் நம்பிக்கையைப் பற்றியும்  தம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இறைவாக்கினர் எசாயாவின் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு  செயலில் படதாத நம்பிக்கை பயன் அற்றது. தீமைக்குப் பதில் நன்மை செய்து அன்பினார் இறைஅரசை இவ்வுலகில் வரச்செய்வது. செய்ய செயலில் விளங்கும் விசுவாசம் அவசியம். செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் தேட இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.




 

பதிலுரைப் பாடல்


திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9


பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.


ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்;  ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.  அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். –பல்லவி

 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.  நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.   எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி
என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;  என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.  உயிர் வாழ்வோர் நாட்டில்,
நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். –பல்லவி



மன்றாட்டுகள்



திருச்சபைக்காக:


உண்மை உணர்வைத் தூண்டியெழுப்பும் ஒப்பற்ற இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் துன்பங்கள் வருவதைக் கொண்டு துவண்டு விடாமல் துணிந்து நிற்கவும், துன்பத்திற்கு பின் இன்பமும், உயிர்ப்பும் உண்டு என்ற நம்பிக்கையில் செயல் பட வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



நம் குடும்பங்களுக்கா:

 

இடர்பாடுகள் நீக்கும் இணையற்ற தலைவா!  இயேசு யார்? என்பதை உணர்ந்து அவரின் சீடத்துவ பணிகளை எம் வாழ்வில் செயலாகவும், இறைப்பற்று வார்த்தையினால் மட்டுமல்ல வாழ்க்கையினாலும் என்று நிருபிக்க எமக்கு தேவையான ஞானத்தையும், துன்பங்களை தாங்கும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா!  எல்லாருக்கும் எல்லாம் பெற எம் நாட்டுத் தலைவர்கள் எந்த ஒருபாகுபாடு பார்க்காமல் மனித நேயம் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்திடவும், நாட்டில் அமைதி நிலவிடவும், மக்களிடையே சமத்துவம் காணவும் வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..



இளையோருக்காக :


வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும்,  அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 





பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment