Friday, November 27, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -29/11/2015

திருவருகைக் காலம் 1 ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எரேமியா 33:14-161
தெசலோ. 3:12 - 4:2
லூக்கா 21:25-36



முன்னுரை:

இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு.  இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தை திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியா பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்க காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக  இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின்  சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.
எனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை  நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.



வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலை பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்கு புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!”  என்று நம்மை வாழ்த்துகின்றார்.  நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். இந்த எச்சரிக்கையுடன் கூடிய இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 25: 4-5. 8-9. 10,14
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;  உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.  உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி
2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;  அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி

மன்றாட்டுகள்:


1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கி பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்த திருவருகைக் காலத்தை சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நீதியின் ஒளியே எம் இறைவா! இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராக மனிதனின் அணுஆயுதக் கண்டுபிடிப்புகள், பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, பரிவினை நீக்கி ஒற்றுமையுடன் வாழ தேவையான ஞானத்தைப் பொழிய  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!மழையினால் பாதிக்கப்பட்ட எலடலா கிராமங்களிலும் பொருள் சேதம், மனஉளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்து தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!  இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப்  பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

Thursday, November 19, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -22/11/2015

ஆண்டின்  34ஆம் ஞாயிறு
கிகிறிஸ்து அரசர் பெருவிழா


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தானியேல் 7:13-14 
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை கிறிஸ்துஅரசரின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். உலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடுகிறோம். பிலாத்து கிறிஸ்துவிடம் நீ யூதர்களின் அரசரா? என்று கேட்டப்போது அவர் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று கூறினார்.  அவர்  உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்து செல்லவே வந்தார். அவர் நம் அரசர். ஆம்! ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர். பணிவின் அரசர். தாழ்ச்சியின் அரசர். எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவி பிறர்க்கு பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார்.  அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது. மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்குமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்ட காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது? யாருக்குரியது? அது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார்.இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில்  இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின்  தலைமை என்பது அன்பின் வழி விடுதலை பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர்  தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனை தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 93: 1. 1-2. 5


பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே!  என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி



மன்றாட்டுகள்:


1.அன்பு தந்தையே எம் இறைவா! திருஅவையில் தலைமைஆயர் தொடங்கி கடைநிலை பொதுநிலையினர் வரை திருஅவைக்காக உழைத்தவர்கள், இன்றும் உழைக்கின்றவர்கள், உழைத்து மரித்தவர்கள் அகிய அனைவரையும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீக கருத்துக்கள் ஈடேற்றம் அடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை பின்பற்றி தங்களை வெறும் மக்ககை ஆளுகின்ற வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற மனநிலையை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இப்பொழுது எம் தமிழகத்திலுள்ள எல்லாமாவட்டங்களிலும் மழையினால் பாதிப்புக்குள்ளாகிய அமைதியிழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் வாழும் எம் சகோதர, சகோதரிகளுக்கும் நீரே ஆறுதலாய் இருந்த அவர்களை தேற்றியம் மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கை திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறிய எம் இறைவா இந்த மழையினால் டெங்குகாய்ச்சல், காலரா போன்ற தொற்று நோயிகள் பரவாமல், குழந்தைகளை நிறைவாக ஆகீர்வதித்து அவர்களை உம் செட்டையின் கீழ் அரவணைத்த பாதுகாத்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மை போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 13, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 15/11/2015


ஆண்டின் 33ஆம் ஞாயிறு





இன்றைய வாசகங்கள்


1. தானியேல் 12:1-3.
2.எபிரேயர் 10:11-14
3.மாற்கு 13: 24-32

திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!  இன்று திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு. வரும் ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. எனவே இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி இருக்கின்றது. இவ்வாசகங்கள் நமக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் உலகத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியை விடுத்து உலகத்தின் முடிவை  நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?என்று கேள்விக்கு விடையாகத் தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைந்துள்ளது.

திரைப்படம், புதினம் இவற்றின் முடிவே நம் ஆர்வமாக இருக்கிறது என்றால், நாம் வாழும் இந்த உலகின் முடிவு எப்படி இருக்கும் பார்ப்பதிலும், நினைத்துப் பார்ப்பதிலும் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்!உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?  இந்த நிலையில் தான் இன்றைய மாற்கு நற்செய்தி வாசகம்  மூன்று கருத்துகளை முன் நாம் முன் வைக்கிறது. 1 நிகழ்காலத்தில் வாழ வேண்டும். 2 கடின உழைப்பு. 3. சான்று வாழ்வு. நம் இன்றைய வாழ்வை நன்றாக வாழ்வோம்.  நாம் நல்லவர்களாயினும், கெட்டவர்களாயினும் நம்மை விரும்பி தேர்ந்துகொள்வது கடவுளின் உரிமையே. அப்படியென்றால், நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும். உலக முடிவைப் பற்றிய கலக்கம் கொள்ளாமல் இன்றைய வாழ்வு நன்றாக வாழ்ந்தால், நாளை நமக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசகம்:

பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். பேரொளி, விண்மீன். வானில் தெரியும் விண்மீன்கள் நம் முன்னோர்கள் என்ற சிந்தனை தொடக்கக் காலம் தொட்டே மனித இனத்திற்கு இருந்தது. இந்த விண்மீன்கள் வெறும் ஒளி மற்றுமல்ல, விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்குமான வாசல் என்றும் அவர்கள் கருதினார்கள். இன்று நாம் காணும் விண்மீன்கள் நம் முன்னோர்கள் என்றால், நாமும் நாளை விண்மீன்களாக ஒளிவீச வேண்டும். அதற்கு நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?' பலரை நல்வழிக்குக் கொணர்வதாக இருக்க வேண்டும்.' என்று நம்மை அழைக்கும் வாசகத்தைக் கவனமுடன் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகம்:


இயேசு தன் உடலால் செலுத்திய ஒரே பலி, யூத தலைமைக்குருக்களின் தொடர் ஆண்டுப் பலிகளை விட மேலானது என்று சொன்ன எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தொடர்ந்து இயேசு என்ன ஆனார் என்பதைப் பற்றி எழுதுகின்றார். பலி செலுத்திய இயேசு இறந்தபின் உயிர்க்கின்றார். உயிர்த்தவர் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். வலப்பக்கம் என்பது ஆற்றலின் உருவகம். கடவுளின் ஆற்றலாக விளங்குகின்றார் இயேசு.'பலியான இயேசு கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார்.' அதாவது, வலுவின்மை எனக் கருதப்பட்டவர் வல்லமை பெறுகிறார். இதுதான் நம் வாழ்வின் இறுதியிலும் நடக்கும் என்பது நமக்கு ஆறுதல். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 16: 5,8. 9-10. 11

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே! ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார் எனவே, நான் அசைவுறேன். -பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது. என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர் உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். -பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி

விசுவாசிகள் மன்றாட்டு:



திருச்சபைக்காக:

எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர் கால கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:

எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக தேர்ந்துக் கொள்ளப்படவும், மற்றவர்களுக்கு உம் அன்பினை பறைச்சாற்றும் வாழ்வதின் மூலம் உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களை தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

எங்களை காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா!  இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடைய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.

துன்பபடுவோருக்காக:

எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!  தமிழகம் எங்கும் நல்ல மழையை கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதர சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Friday, November 6, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 08/11/2015


ஆண்டின் 32வது ஞாயிறு     
                     
           

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1அரசர் 17:10-19 
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு  இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் கிறிஸ்துவின்
பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். எப்பொழுதெல்லாம் நாம் நம்மை முழுமையாகக் கொடுக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் கொடுத்ததற்கு மேலாகவே பெறுகிறோம் என்பதை இன்றைய அருள்வாக்கு நமக்கு எடுத்துரைக்கிறது. சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் ஏழைக்கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய :  இரண்டாம்  வாசகம் 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.'

என்னிடம் உள்ளதில் எஞ்சியதைக் கொடுத்தல் (நற்செய்தி வாசகம்), என்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்தல் (முதல் வாசகம், நற்செய்தி வாசகம்), என்னையே கொடுத்தல் (இரண்டாம் வாசகம்). இதில் என் கொடுத்தல் எவ்வகை? முதல் ஏற்பாட்டு யோசேப்பு தான்  பெறுவதைவிட அதிகம் கொடுக்கிறார். மேன்மை பெறுகின்றார். ஆனால் சாலமோன் தான் பெறுவதைவிட குறைவாக கொடுக்கிறார்.  தாழ்வுற்று மடிகின்றார். ஒவ்வொரு நாளும் நான் கடவுளிடமிருந்து, மற்றவரிடமிருந்து பெறுபவை எண்ணற்றவை. ஆனால் நான் கொடுப்பது எவ்வளவு? இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில்  மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:



முதல் வாசகம்

காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.  'மாவு தீரவில்லை. எண்ணெய்  குறையவில்லை.' கடைசிக் கை மாவும், கடைசித்துளி எண்ணெயும் குறையவேயில்லை.  என்னவொரு ஆச்சர்யம். 'என்னிடம் உள்ளது  இதுதான்' என்று இறைவனிடம் கொடுப்பவர்களுக்கு, அவர் இன்னும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார் என்பதே அவர் நிகழ்த்தும் அற்புதம். நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம்  வாசகம்

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என்று அறிக்கையிட்ட எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தொடர்ந்து அவரின்  குருத்துவத்தின் மேன்மையை முன்வைக்கின்றார். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய இரண்டாம் வாசகம்: 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.' உயிரியில் பகுப்பாய்வில் மனிதரின் உயிரைவிட மேலான உயிர் இயேசுவின் உயிர். இவ்வாறாக, 'பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே ஒருமுறை இயேசு தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.' எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு .

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி 

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி 

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

மன்றாட்டுகள்:


1.அன்பு இறைவா! திருஅவையில் மரித்த அனைத்து திருத்தந்தையர்கள், ஆயர்கள், துறவியர் பொதுநிலையினார் நற்செய்தியாளர்கள்,பிறசபை 
போதகர்கள், நாட்டு தலைவர்கள் திருச்சபையில் அவர்கள் ஆற்றிய பணிகள், நாட்டுக்காக அவர்களின் அர்ப்பண வாழ்வை உம் பாதம்  வைக்கிறோம். இறந்த இவர்கள் அனைவருடைய ஆன்மா நித்தய இளைப்பாற்றி அடைய  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.படைப்பின் நாயகனே! எம் இறைவா எம் நாட்டில் சிறப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையின்மையின் காரணமாக விவசாய வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, வெப்பமயமாதல் போன்ற காரணிகளை நீக்கி உம் இரக்கத்தினால் நல்ல மழையை பெய்வித்து நிலங்களையும், இயற்கை வளங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காக திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு
இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாக பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின்  அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த  பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப்  புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...