Thursday, January 14, 2016

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 17/01/2016


பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

முன்னுரை:


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் முதல்  புதுமை! அவரின் பொதுவாழ்வில் அன்னை  மரியாளின் கரிசனை அன்பால் ஓர் இனிய சுவையாக புதுமையுடன்  வெளிப்படுகின்றார். அடுத்தவரின் துயரம் அறிந்த அன்னையாக அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் என்று அழைக்கின்றார்.  ஆம் அன்னையின் அழைப்போடு இயேசுவும் தன் பொதுவாழ்வைத் தொடங்குவதாக இந்த நிகழ்வு அமைகின்றது.

சாதாரணத் தண்ணீர்,  குணம் மணம் இல்லா தண்ணீரை இரசமாக மாற்றி மகிழ்ச்சி நிறைந்தோடச் செய்கிறார். இயேசுவின் வருகை  சோகத்தை இன்பமாக மாற்றுகிறது. நம் உப்புச் சப்பற்ற வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தால் மட்டும் போதும் அதை  இரசனையுள்ள வாழ்வாக, மகிழ்ச்சி நிறைந்த, குறிக்கோள் நிறைந்த வாழ்வாக மாற்றுவார். இயேசு வந்தால் நம் வாழ்க்கையில்  நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நிறைவாக கலந்துக் கொண்டு  மன்றாடுவோம். மாற்றத்தைக் காண்போம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:


சீயோன் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அதன் மீட்பும், வெற்றியும் மீட்பின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும் வரை  கடவுளின் மௌனம் வெளிப்படுகின்றது. அந்த மீட்பினால் வரும் மகிழ்ச்சியை பிறஇனத்தார் மன்னர் அனைவரும் காண்பது 
பற்றியும், கடவுளின் திருக்கரத்தில் மணிமகுடமாய் விளங்குவது பற்றி ஒரு நாளும் கைவிடப்பட்ட நிலையால் இருக்கப்போவதில்லை  என நலம் நல்கும் நம்பிக்கையின் வாக்குறுதியை தரும் முதல் வாசகமான எசாயாவின் இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

அருங்கொடைகள் அனைத்தும் கடவுளிடமிருந்தே வருகின்றன. ஆனால் அதன் செயல்பாடுகள் வெவ்வேறானவே. ஒவ்வொரு  தனிமனிதருக்கும் குறிப்பிட்ட அருள்வரங்கள் கடவுளிடமிருந்து கொடையாக  கொடுக்கப்படுகின்றன. அவற்றை நாம் எந்த  அளவிற்கு  பயன்படுத்துகின்றோம். அதனை அப்படியே மறைத்து வைக்காமல், வெறும் சுயநலனுக்காக மட்டும் பயன்படாமல் அனைத்து மனித பொதுவாழ்வில் பயன்படுத்தும்போது தான் அக்கொடைகள் நிறைவடைகின்றன  எனக் கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனம் திறந்து கேட்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10

பல்லவி:
அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப்  போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;  மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.  ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே  கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

மன்றாட்டுகள்:


1.அருளும் இரக்கமும் கொண்ட இறைவனே! திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள்,  பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் விழுமிங்களையும், வார்த்தைகளையும் அவரவர் வாழ்க்கையில் கடைபிடித்து இயேசுவின்  சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிக்கும் பணியை எந்தவித தயக்கமின்றி தொடர்ந்து செய்ய வேண்டியவரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை  உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன்  வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் இறைவனே, எம் நாட்டு தலைவர்களை நல்வழிப்படுத்தி, மக்களின் நலன்களை  பேணவும், நாட்டின் இயற்கை செல்வங்கள் பாதுகாத்திடவும், தீவிரவாதம் ஒழிந்து சகிப்புத்தன்மை நிறைந்திடவும், மக்கள்  அனைவரும் ஓரே சமூகமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம்  பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம்  பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



No comments:

Post a Comment