பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
முன்னுரை:
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின்
நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை இறை இரக்கத்தின்
ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்த ஆண்டு அனைவருக்கும் இறைவனின்
இரக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்ற ஆண்டாக அமைய வேண்டும்.
இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாக தன் சீடத்தி மகதலா மரியாவின்
வழியாக தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டு கலிலேயாவில் தன் சீடர்களை சந்திக்கச்
செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்க துணிவோடு வெளியே
சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிட செய்கிறார். நீரே என்
ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டுக் கொண்ட தோமையார் மூலம் காணமால்
இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறுபெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.
இயேசுவை சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோரு மாற்றத்தை
அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக் கொண்டு அவரின் பேரக்கத்தைப் பெற்று அவரின்
சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் நிறைவாய் பங்கேற்ப்போம்.
வாசகமுன்னுரை:
தூய ஆவியானவரின்
வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த திருத்தூதர்களின்
வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள்
மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான
இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில்
இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத்
தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை
விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகள் வார்த்தைகளுக்குக்
கவனமுடன் செவிமெடுப்போம்.
பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும்
திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது
அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு
அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின் மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம்
வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
1.`என்றென்றும் உள்ளது
அவரது பேரன்பு'
என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு'
என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு'
என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி
2.அவர்கள் என்னை
வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்;
என் மீட்பும் அவரே.
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. -பல்லவி
3.கட்டுவோர்
புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு
இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
-பல்லவி
மன்றாட்டுகள்:
1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு
இறைவா! திருத்தூதர்கள் வழியாக செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். வாழையடி வாழையாக இன்று
வரை தொடரும் இந்த திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன்
பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இவர்கள் தாங்களாக
எதையும் செய்வதில்லை. இவர்கள் வழியாக செயலாற்றுபவர் இறைவனே. இவர்கள் இறைவனின்
கையில் உள்ள கருவிகள் மட்டுமே. இதனை உணர்ந்து உம் திருஅவையை சிறப்புடன் வழிநடத்த
வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
2.காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில்
நம்பிக்கை கொண்டு கூடிவருதலால் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு
உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு
துணிவையும் தந்து எங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில்
வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு
இவர்கள் வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
3.
நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள் என்று பாசத்துடன்
உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா! உலக
நாடுகளில் மக்களை வழி நடத்தும் தலைவர்கள் உம் மக்களை பயங்கரவாதத்திலிருந்தும்,
நாட்டுகளுக்கிடைய ஏற்படும் போட்டி, பொறமை
மற்றும் மத்தியதரைகடல், ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் மதகலவரங்களிலிருந்து காத்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
4.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே!
எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு,
தெரு ஒரங்களிலும், பேருந்து
நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே
அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான
அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.