பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
முன்னுரை:
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர்
இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் புதிய கட்டளையை அறிந்துக் கொள்ள ஆவலுடன் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறோம்.
நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும். “நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் அன்பு கட்டளையை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.
பர்னபா, பவுல் இவர்களின் வெற்றியின் காரணம் பர்னபா பவுலடியார் மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பையும், தியாக அன்பையும் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
பவுலும் பர்னபாவும் மனம் தளர்ந்தவர்களுக்கு 'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள்
நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். 'செபித்து,
நோன்பிருந்து, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து'
தலைவர்களை நியமிக்கின்றனர். இதில் இவர்கள் தங்கள் மக்கள்மேல்
கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தெரிகிறது.
'இதுதான் நான்!' 'இவ்வளவுதான் நான் செய்தது!'
என தங்களின் வெற்றிகளையும், தோல்விகளையும்
ஏற்றுக்கொள்வதும் அவர்களது அன்பின் வெளிப்பாடே.
இப்படியாக, இயேசுவின்
புதிய கட்டளையை வாழ்ந்து காட்டி, அன்பின் வழியாக தாங்கள்
இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்று பகர்கின்ற முதல்வாசகமாகிய திருத்தூதர்
பணிகள் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.
இந்த அன்புக் கட்டளையை நாம்
எப்படி வாழ்வது? என்ற கேள்விக்குப் பதில் தருகிறது இன்றைய
இரண்டாம் வாசகம் (திவெ 21:1-5அ). இன்றைய இரண்டாம் வாசகத்தில்,
'புதிய வானகமும், புதிய வையகமும் இறங்கி
வருவதைக்' காட்சியில் காண்கின்றார் யோவான். அவர் கூறும்
ஐந்து கருத்துக்கள். 1. அன்பின் முதற்படி தீமை களைவது.
2. 'இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்' இது இறைவனின் இரண்டாம் படைப்புச் செயலைக் குறிக்கிறது. 3. 'இனி கடவுளின் கூடாரம் மனிதர்கள் நடுவே!' அன்பு செய்யும் இருவர் கடவுளின் இயல்பையே பிரதிபலிக்கின்றனர். 4.
'இறைவன் அவர்களோடு!' இந்த சொல் இறைவனின் உடனிருப்பு
குறிக்கிறது. 5. . 'அவர்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.' அன்பின் கரம் கண்ணீர் துடைக்க வேண்டும். இந்த வாசகத்திற்கு அன்புடன்
செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு
கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்
இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய
அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின்
பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது
ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி
மன்றாட்டுகள்:
1.அன்பின் இறைவா! உம் அன்பு குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக்
கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து
வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள்
வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும்,
நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்த புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை
அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. 'அன்பு
தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு
இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும்,
நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து
உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.
நம்மை
அன்பு செய்வதும்,
நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம்
படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும்,
நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை
அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை
பொழியவேண்டுமென்று உயிர்த்த
இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment